சிறுபான்மையினர் கடன் திட்டம் விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினர் சிறு தொழில் தொடங்க கடன் மற்றும் கல்விக்கான கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் வாயிலாக, சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுவதற்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன் வழங்கப்பட உள்ளது. மேலும், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், மற்றும் கல்வி கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கைவினை கலைஞர் கடன் திட்டம் வழங்கப்படுகிறது. குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்களான உபகரணங்கள், கருவிகள், இயந்திரங்கள் வாங்குவதற்கு இந்த கடன் வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் கடன் விண்ணப்பங்களை, கலெக்டர் அலுவலகத்தில் பெறலாம். மேலும், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம், மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களிலும் பெறலாம். இவ்வாறு கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
Next Story

