கோவை: வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்- ஜெபராஜ் ஆதரவாளர் கைது!

X
மதபோதகர் ஜான் ஜெபராஜின் ஆதரவாளரான ஜோஷ்வா எடிசன், வழக்கறிஞர் சாண்டி வில்லியம்ஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் துடியலூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான கோவை சாண்டி வில்லியம்ஸ், போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளிவந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். கடந்த மாதம், சாண்டி வில்லியம்ஸின் நண்பர் ஒருவர் சமூக வலைதளங்களில் ஜான் ஜெபராஜ் குறித்து பதிவிட்ட கருத்துக்களால் ஆத்திரமடைந்த ஜோஷ்வா எடிசன், வழக்கறிஞர் சாண்டி வில்லியம்ஸ் மற்றும் அவரது நண்பர் குறித்து சமூக வலைதளங்களிலும் யூடியூப் சேனல்களிலும் அவதூறு பரப்பினார். இதனையடுத்து, சாண்டி வில்லியம்ஸின் நண்பர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் ஜோஷ்வா எடிசன் மீது புகார் அளித்தார். ஜோஷ்வா எடிசன் வழக்கறிஞர் சாண்டி வில்லியம்ஸின் நண்பரும் ரியல் எஸ்டேட் அதிபருமான பிரபு டேனியலுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து, ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி சாண்டி வில்லியம்ஸுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பிரபு டேனியல் வழக்கறிஞர் சாண்டி வில்லியம்ஸிடம் தெரிவிக்க, அவர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், தலைமறைவாக இருந்த கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோஷ்வா எடிசனை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
Next Story

