சேலத்தில் கட்டிட தொழிலாளி மர்மசாவில் திடீர் திருப்பம் நண்பர்கள் அடித்து கொன்றது அம்பலம்

சேலத்தில் கட்டிட தொழிலாளி மர்மசாவில் திடீர் திருப்பம் நண்பர்கள் அடித்து கொன்றது அம்பலம்
X
நண்பர் உள்பட 6 பேர் கைது
சேலம் சூரமங்கலம் அரியாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் அஜித்குமார் (வயது 21). கட்டிட தொழிலாளி. இவர், கடந்த 26-ந் தேதி அரியாகவுண்டம்பட்டியில உள்ள ஒரு குடோன் பின்புறத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஜித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது அவரை சிலர் கொலை செய்திருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மர்மசாவு வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணையை தொடங்கினர். இதையடுத்து அஜித்குமாரின் நண்பர்கள் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அஜித்குமாரின் நண்பர் கார்த்திக். இவர் திருமணம் ஆன தனது உறவுக்கார பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். அதேசமயத்தில் அஜித்குமாரும் அந்த பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கார்த்திக் ஆத்திரமடைந்தார். இதனால் அவர் தான் பழகும் உறவுக்கார பெண்ணுடன் இருக்கும் பழக்கத்தை விட்டு விடும்படி கார்த்திக் மிரட்டியுள்ளார். அதற்கு அஜித்குமார் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், தனது நண்பர்களான மணிகண்டன், அருண்குமார், வசந்த், வேலன், விக்ரம் ஆகியோருடன் சேர்ந்து அஜித்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். சம்பவத்தன்று அவர்கள் மது அருந்தலாம் என அஜித்குமாரை அழைத்து சென்று அவரை தலை மற்றும் உடல் பகுதியில் சரமாரியாக அடித்துள்ளனர். இதில் அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்ததால் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன்பிறகு அஜித்குமார் இறந்துவிட்டது தெரியவந்தது. இதனால் அஜித்குமாரை கொலை செய்ததாக மணிகண்டன், அருண்குமார், வசந்த், வேலன், விக்ரம் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கார்த்திக்கை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இதனிடையே, கொலை வழக்கில் முக்கிய நபராக திகழ்ந்த கார்த்திக்கை பள்ளப்பட்டி போலீசார் வழிப்பறி வழக்கில் நேற்று கைது செய்தனர். இதனால் கட்டிட தொழிலாளி அஜித்குமார் கொலை வழக்கில் கார்த்திக்கை சூரமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story