கடலில் மாயமான மீனவரை மீட்க வேண்டும்

X
கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது தவறி விழுந்து கடலில் மாயமான இனயம் மீனவரை தேடி கண்டுபிடிக்க வேண்டும் முதலமைச்சர் மற்றும் மீன்வளம் - மீனவர் நலத்துறை அமைச்சர், குமரி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக கடிதத்தில் கூறியிருப்பதாவது... கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, இனயம் புத்தன்துறை ஊராட்சிக்குட்பட்ட, இனயம் என்ற முகவரியை சேர்ந்த லேனடிமை, என்பவர் தனக்கு சொந்தமான கட்டு மரத்தில் நேற்று 01-06-2025 -ம் தேதி மாலை தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலில் சென்றார். அவர் மீன்பிடித்து கொண்டு இன்று காலை கரை திரும்ப வேண்டும். ஆனால் கரை திரும்பாததால் அவரது குடும்பத்தார் மற்றும் மீனவர்கள் கடலில் தேடும் போது கடலுக்குள் தவறி விழுந்து மாயமாகிய நிலையில் மணக்குடி அருகே உள்ள பள்ளம் பகுதியில் அவரது கட்டு மரம் மட்டும் கடலில் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் இவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, பெரிதும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆகவே கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படையும் இணைந்து போர்கால அடிப்படையில் தேடுதல் பணிகளை தீவிரபடுத்தி கட்டு மரத்தில் இருந்து கடலில் தவறி விழுந்து மாயமான லேனடிமையை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது
Next Story

