தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியினை உபயோகிப்போர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியினை உபயோகிப்போர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்
X
தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியினை உபயோகிப்போர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்
அளவுக்கு அதிகமான சத்தம் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இதில், விதிகளை மீறி செயல்படும் தொழிற்சாலைகளில் ஏற்படும் சத்தங்கள், அதிக ஒலி எழுப்பும் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் விழாக்காலங்களில் ஒலி பெருக்கிகள் மூலமாக ஒலி எழுப்புதல் ஆகியவைகள் ஒலி மாசு ஏற்பட முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. விருதுநகர் மாவட்டத்தில், இது போன்ற அளவுக்கு அதிகமான சத்தங்களால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதாக பத்திரிக்கைச் செய்திகள் மற்றும் புகார்கள் வந்துள்ளன. பொதுவாக, தொழிற்சாலைகள் ஒலி மாசினைக் குறைக்க ஒலி மாசு தடுப்பு சாதனங்களை நிறுவி ஒலி மாசினைக் குறைக்கின்றன. இது போன்று, வாகனப்போக்குவரத்தை நெறிபடுத்துவதன் மூலமும் ஒலி மாசினைக் குறைக்க இயலும். ஆனால் பொது சுகாதாரச் சட்டத்தில் உள்ள வழிமுறைகளை மீறி அரசியல் கட்சி நிகழ்வுகள், திருவிழாக்கள் மற்றும் தனி நபரால் நடத்தப்படும் விழா மற்றும் கொண்டாட்டங்களில் முறையற்ற வகையில் ஒலி பெருக்கிகளை குறிப்பாக தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை உபயோகிப்பதனால் வெளி வரும் அதிக சத்தமான ஒலி மாசினால்,பொது மக்களுக்கும், முதியோர்களுக்கும், படிக்கும் மாணவர்களுக்கும் மற்றும் நோயாளிகளுக்கும் எண்ணற்ற இன்னல்கள் ஏற்படுகின்றன. எனவே, மேற்கூறிய நிகழ்வுகளுக்கு ஒலி பெருக்கியை நிறுவி பயன்படுத்தும் முன் காவல் துறையிடம் முறையாக முன்அனுமதி பெற்று, அனுமதிக்கப்பட்ட பகுதி மற்றும் நேரங்களில் மட்டுமே குறைந்த அளவு ஒலியுடன் ஒலி பெருக்கியினை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் எந்த நேர்வுகளிலும் இரவு நேரங்களில் (இரவு 10.00 மணி முதல் காலை 6.00மணி வரை) ஒலி பெருக்கினை பயன்படுத்தக்கூடாது என்றும், குறிப்பாக தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது எனவும் எச்சரிக்கப்படுகிறது. காவல்துறை அனுமதியின்றி ஒலி பெருக்கியினை நிறுவி பயன்படுத்துவோர்கள் மீதும், இரவு நேரங்களில் ஒலி பெருக்கியை பயன்படுத்துவோர் மீதும் மற்றும் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கியினை பயன்படுத்துவோர் மீதும் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகளும் மற்றும் ஒலி பெருக்கி சாதனங்களை பறிமுதல் செய்யவும் பொது சுகாதாரச் சட்டம், காற்று மாசுபாடு சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் குறிப்பாக சவுண்ட் சிஸ்டம் வைத்திருக்கும் உரிமையாளர்கள் இதில் கவனமுடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Next Story