நவதிருப்பதி கோவில்களில் மங்களாசாசனம்:

X
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் வைகாசி திருவிழாவில் நவதிருப்பதி பெருமாள்களுக்கு நம்மாழ்வார் மங்களாசாசனம் நிகழ்வு நடைபெற்றது. நவதிருப்பதிகளில் 9-ம் திருப்பதியும், குருவுக்கு அதிபதியுமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதா் ஆழ்வார் கோவிலில் மூலவா் ஆதிநாதா் நின்ற திருக்கோலத்திலும் ஆதிநாயகி, குருகூா்வல்லி அம்பாள்களும் அருள்பாளிக்கின்றனர். ஆன்மிக சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் சுவாமி நம்மாழ்வார் வைகாசி விசாகம் அன்று திருஅவதாரம் செய்தார். அவரது அவதாரத்தை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 31- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலையில் நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஐந்தாம் திருநாளான நேற்று காலையில் நம்மாழ்வார், நவதிருப்பதி பெருமாள்களுக்கு ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் முன்பு மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், நித்தியல், கோஷ்டி நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணியளவில் நவதிருப்பதி கோவில்களில் இருந்து ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினிவேந்தன், பெருங்குளம் மாயக்கூத்தன், தொலைவில்லிமங்கலம் செந்தாமரைக் கண்ணன், இரட்டை திருப்பதி தேவபிரான், தென்திருப்பேரை நிகரில் முகில்வண்ணன், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் ஆகிய பெருமாள்களுக்கு ஆழ்வார்திருநகரி கோவில் முன்பு வந்தடைந்தனர். அங்கு பெருமாள்களுக்கு நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் நம்மாழ்வாருக்கு மதுரகவி ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வருகிற 8-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. மறுநாள் தீர்த்தவாரியுடன் விழா நிறைவுபெறும். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Next Story

