சித்தாய்மூர் அகிலாண்டேஸ்வரி அம்பாள் உடனுறை பொன் வைத்த நாதர் சுவாமி திருக்கோயில்
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த சித்தாய்மூரில், இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற அகிலாண்டேஸ்வரி அம்பாள் உடனுறை பொன் வைத்த நாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், வைகாசி விசாக பெருவிழா கடந்த 8 -ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகள் வீதி உலா புறப்பாடு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதனை முன்னிட்டு, விநாயகர், அகிலாண்டேஸ்வரி அம்பாள் உடனுறை பொன் வைத்த நாதர் சுவாமி, வள்ளி தேவசேனா சமேத வில்லேந்திய வேலவர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், சுவாமி வீதியுலா புறப்பாட்டின் போது வீடுகள் தோறும் மக்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.
Next Story



