கபிலர்மலை அருகே பூட்டிய வீட்டிற்குள் கணவன், மனைவி பிணம்.

X

கபிலர்மலை அருகே பூட்டிய வீட்டிற்குள் கணவன், மனைவி பிணம். கடன் தொல்லையா என போலீசார் விசாரணை.
பரமத்தி வேலூர்.,ஜூன்.10: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே இருக்கூர் ஊராட்சி வடக்கு செல்லப்பம்பாளையத்தை சேர்ந்தவர் ரவி என்கிற பொன்னுசாமி (வயது 55). விவசாயி. இவரது மனைவி வாசுகி (50). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். 2 பேரும் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். விவசாயத்தில் ரவிக்கு போதிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கீரம்பூர் ராசாம்பாளையம் டோல்கேட் அருகே உள்ள ஒரு இடத்தில் பாக்குமட்டை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ரவியின் வீடு திறக்காமல் இருந்தது. நேற்று காலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர் அப்போது அங்கு ரவியும், அவரது மனைவி வாசுகியும் உடல் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். பின்னர் அவர்கள் ரவியின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து கடன் தொல்லையால் கணவன், மனைவி. தற்கொலை செய்து கொண்டனரா அல்லது குடும்ப தகராறில், தற்கொலை செய்து கொண்டனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story