மயானம் அளவீடு பணிக்கு எதிர்ப்பு பொதுமக்கள் தர்ணா

மயானம் அளவீடு பணிக்கு எதிர்ப்பு பொதுமக்கள் தர்ணா
X
குமாரபாளையத்தில் சமத்துவ மயானத்தை மதங்கள் சார்ந்து பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட குளத்துக்காடு பகுதியில் இந்து சமத்துவ மயானம் உள்ளது. இதில், கிறிஸ்தவர்கள் ஒரு பகுதியாகவும், மீதமுள்ள பகுதிகளில் இந்துக்களும், இறந்தவர்களை அடக்கம் செய்து வந்தனர். இந் நிலையில் திடீரென கிறிஸ்தவர்கள் தங்கள் உறவினர்கள் இறந்த பிறகு, புதைத்த இடத்தின் மீது சிலுவைகளை பதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மயானம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே, மத அடையாளங்களை சவக்குளிகள் மீது அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். மதக்கலவரம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக வருவாய் துறையினரும், காவல்துறையினரும் இணைந்து நான்கு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், நேற்றுமுன்தினம் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி தலைமையில், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.. இதிலும் உடன்பாடு ஏற்படாததால் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், நேற்று தாசில்தார் சிவக்குமார் தலைமையில் நில அளவையர்கள் மயானத்தை அளவிடும் பணியினை தொடங்கினர். இது குறித்த தகவல் பரவியதையடுத்து பொதுமக்கள் மயானம் முன்பு திரண்டு திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் மயானத்தை அளவீடு செய்யக்கூடாது, மத அடையாளங்களைக் கொண்டு மயானத்தை பிரிக்க கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குமாரபாளையம் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அளவிடும் பணி நடைபெறாது என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இது குறித்து சமூக ஆர்வலர் வழக்கறிஞர் தங்கவேல் கூறியதாவது இந்த மயானம் பொது மயானம். இங்கு யாரும் மாத அடையாளங்கள் வைக்க கூடாது. இதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி, யாரும் மத அடையாளங்கள் வைக்க கூடாது என முடிவு செய்யப்பட்டது. இங்கு அளவீடு செய்ய அனுமதிக்க மாட்டோம். மீறி அளவீடு செய்தால், எங்கள் உயிரை கூட கொடுக்க தயாராக உள்ளோம். எங்கள் சடலங்கள் மீது தான் அளவீடு செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story