பட்டாசு ஆலைகளில் உரிய கட்டுப்பாடுகளை செயல்படுத்த செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

பட்டாசு ஆலைகளில் உரிய கட்டுப்பாடுகளை செயல்படுத்த செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
X
பட்டாசு தொழிற்சாலைகளில் உரிய கட்டுப்பாடுகளை செயல்படுத்தாத காரணத்தால் தான் இத்தகைய விபத்துக்கள் ஏற்படுகின்றன என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
விருதுநகர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியார் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் பெண்கள் உட்பட 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். இத்தகைய வெடிவிபத்து சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதும், அப்பாவித் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனை தடுக்கின்ற வகையில் பட்டாசு தொழிற்சாலைகளில் உரிய கட்டுப்பாடுகளை செயல்படுத்தாத காரணத்தால் தான் இத்தகைய விபத்துக்கள் ஏற்படுகின்றன. தொழிற்சாலை ஒழுங்குமுறை நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. இதுபோன்ற அலட்சியப் போக்கு குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும். விபத்துகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, பாதுகாப்பான முறையில் பட்டாசு தொழில் தொடர்ந்து நடைபெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். இந்த பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை வழங்குவதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணமும் சிறந்த முறையில் சிகிச்சையும் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
Next Story