மீன்வளக் கல்லூரியில் நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி

X
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிலதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடியில் "நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பு” என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. மொத்தம் 60 விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர். இப்பயிற்சியினை மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையும், ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் பவானிசாகர் வேளாண் துறை மூலம் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையுடன் இணைந்து நடத்தியது. இப்பயிற்சியில் நன்னீரில் வளர்க்கப்படும் பல்வேறு முக்கியமான அலங்கார மீன் இனங்கள், முட்டை மற்றும் குட்டி ஈனும் அலங்கார மீன் இனங்களின் இனப்பெருக்கம், நீர்தரக் கட்டுப்பாடு, நோய் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் குறித்த தொழில்நுட்பங்கள் கற்பிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு களப்பயிற்சி அனுபவம் சாயர்புரத்தில் அமைந்துள்ள சித்தா அக்வா அலங்கார மீன் பண்ணையில் வைத்து அளிக்கப்பட்டது. தூத்துக்குடி, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் ப.அகிலன் தலைமையுரையில் நன்னீர் அலங்கார மீன் வளர்ப்பில் புதிதாக தொழில் துவங்கி நன்முறையில் லாபம் பெற்று பயனடைய வேண்டுமென்று பயிற்சியாளர்களை ஊக்குவித்தார். இப்பயிற்சியை உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் (பொ) கோ. அருள் ஓளி, ஒருங்கிணைப்பில் உதவிப் பேராசிரியர்கள் பூ. மணிகண்டன், வெ. கோமதி மற்றும் ம. கீதா ஆகியோர் நடத்தினர்.
Next Story

