மின்வாரிய வருவாய் உதவியாளர் மீது புகார்

X
திண்டுக்கல் மின்சார வாரிய தெற்கு வட்டத்தில் வருவாய் உதவியாளராக பணியாற்றி வருபவர் நந்தகுமார். இவர் திமுக தொழிற்சங்கத்தில் திண்டுக்கல் மின்வாரிய பிரிவில் பொருளாளராகவும் இருந்து வருகிறார். இவர் 2021ஆம் ஆண்டு தன்னுடன் பணிபுரியும் சக பெண் ஊழியர்களை அலுவலகத்தில் வைத்து சத்தமான முறையில் ஆபாசமான வார்த்தையில் பேசுவது, மிரட்டுவது போன்ற செயலில் ஈடுபடுவதாக அங்கு பணியில் உள்ள பெண்கள் இவர் மீது புகார் அளித்துள்ளனர். இது குறித்து மின்சார வாரியத்தில் இருந்து குழு அமைக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு நந்தகுமார் இடம் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டிருந்தது. தற்போது வரை இந்த விசாரணையானது முடிவடையாத நிலையில், நந்தகுமாரை உயர் அதிகாரிகள் 2025 ல் தற்போது அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு பணி மாறுதல் செய்துள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என தெற்கு மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் மீண்டும் புகார் மனுவை சென்னை உட்பட அனைத்து மின்வாரிய அலுவலகத்திற்கும் அளித்துள்ளனர். இந்த புகார் மனுவில் பெண்களை ஆபாச வார்த்தை மற்றும் தரக்குறைவாக பேசியதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குற்றம் சாட்டப்பட்ட நந்தகுமார் இடம் தொலைபேசி வாயிலாக கேட்டபோது, "கடந்த 2021 ஆம் ஆண்டு எனது தனிப்பட்ட பிரச்சனையை வைத்துக்கொண்டு எனது மகள் குறித்து தவறுதலாக பேசியதற்காக அலுவலகத்தில் சத்தமாக பேசினேன். அது குறித்து சென்னையில் இருந்த வந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தற்போது விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. தற்போது திமுக தொழிற்சங்கத்தில் திண்டுக்கல் பிரிவில் பொருளாளராக இருந்து வருகிறேன். தற்போது தொழிற்சங்கத்திற்கு ரூ. 5 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை பெறுவதற்காக திமுக தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்த மீனாட்சி சுந்தரம் என்பவர் தூண்டுதலின் பெயரில் மீண்டும் 4 வருடம் பின்பு இந்த புகாரை என் மீது தெரிவித்து வருகின்றனர்.
Next Story

