சின்னத்தும்பூரில் நடந்த மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் அடிப்படை வசதி கேட்டு
நாகை மாவட்டம் கீழையூர் அடுத்த சின்னத்தும்பூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமத்துமேடு ஈவெரா நகரிலுள்ள, கொள்ளைகாடு பகுதிகளில் சுமார் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு மற்றும் சாலை வசதி இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகிள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக, சின்னத்தும்பூர் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில், அடிப்படை வசதி வேண்டி பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மேலும், அப்பகுதியை சேர்ந்த பெண் இதற்கு முன் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஆவேசமாக பேசித் தனது மனக்குமுறலை வெளிப்படுத்திய வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், கோரிக்கை மனு பெறப்பட்ட மறு தினமே தகவலறிந்த, வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவர் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில், கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவகர் மற்றும் ஹரிகிருஷ்ணன், ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். போதிய பராமரிப்பின்றி உள்ள குளத்தின் நீரை உடனடியாக இறைத்து தூர்வாரவும், சேதமடைந்த நிலையில் இருக்கும் சாலையை உடனடியாக செப்பனிடவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.மேலும், மக்களுக்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தருவதுடன், தேங்கியுள்ள குப்பைகளை அகற்றப்படும் என அலுவலர்கள் உறுதி அளித்தனர். நேற்று மனு அளித்த மறுநாளே தங்களுடைய பகுதிக்கு நேரடியாக வந்து கள ஆய்வு மேற்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், விரைந்து எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு என அப்பகுதியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Next Story



