திருமாவளவனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

X
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக, 2019 ஏப்.15-ம் தேதி அரியலூர் மாவட்டம் இலந்தைகூடம் பேருந்து நிறுத்தம் அருகில், தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இரவு 10 மணிக்குள் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும். ஆனால், தேர்தல் விதியை மீறி, 4 நிமிடங்கள் கூடுதலாக பிரச்சாரம் செய்ததாக திருமாவளவனுக்கு எதிராக அரியலூர் மாவட்டம் வெங்கனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அரியலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று (ஜூன் 20) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, திருமாவளவன் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொண்டு அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
Next Story

