சிறுத்தை தாக்குதல்: மொடமாத்தி பகுதியில் பரபரப்பு!

நவக்கரை வனப்பிரிவில் சிறுத்தை ஒன்று ஆடுகளை வேட்டையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுக்கரை வனச்சரகம், நவக்கரை வனப்பிரிவில் உள்ள சோளக்கரை சுற்று பகுதியில், சிறுத்தை ஒன்று ஆடுகளை வேட்டையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொடமாத்தி தோட்டம், மாவூத்தம்பதி கிராமத்தைச் சேர்ந்த கௌதம் என்பவரின் ஆடு மற்றும் இரண்டு ஆட்டுக்குட்டிகள் நேற்று சிறுத்தையால் கடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்படி அந்தப் பகுதியில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. சிறுத்தை தாக்குதல் நடந்த இடம் வனப்பகுதியில் இருந்து சுமார் 350 மீட்டர் தொலைவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டுக்குட்டிகளை சிறுத்தை வேட்டையாடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அருகாமை கிராமங்களில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி, சிறுத்தையின் நடமாட்டங்களை கண்காணித்து வருகின்றனர்.
Next Story