இந்திய கம்யூ. கட்சி சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கீழையூர் கடைத் தெருவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து, கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கீழ்வேளூர் வட்டாட்சியர் கவிதாஸ் தலைமையில் நேற்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில், கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் டி.செல்வம், ஒன்றிய செயலாளர் எஸ்.காந்தி, ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ஜி.சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில், கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலரை (கி.ஊ) கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், அடையாளம் தெரியாத நபரால் கிழிக்கப்பட்டுள்ளது. அதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (கி.ஊ) ஆதரவாக பொதுமக்கள் மற்றும் பொதுவுடைமை இயக்கம் என்ற பெயரில் நோட்டீஸ் ஒட்டிய நபரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பணிபுரிந்து வரும் வட்டார வளர்ச்சி அலுவலரை (கி.ஊ) மாறுதல் செய்ய வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை முன்வைத்து பேசப்பட்டது. ஆலோசனைக்கு பிறகு, மேற்கண்ட கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியருக்கும், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கும் அனுப்பி வைக்கப்படும் என்ற முடிவினை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில், சாலை மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது. நிகழ்ச்சியில், ஒன்றிய விவசாயச் சங்க உறுப்பினர் சுப்பிரமணியன், விவசாயச் சங்க ஒன்றிய துணைத் தலைவர் ஹாஜா அலாவுதீன், விவசாயச் சங்க ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் மாசேத்துங், முன்னாள் கீழையூர் ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.மல்லிகா, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பாப்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story




