பேராவூரணி அரசு மருத்துவமனை புதிய கட்டிடப் பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ... 

பேராவூரணி அரசு மருத்துவமனை புதிய கட்டிடப் பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ... 
X
துப்புரவு பணியாளர்கள் தேவை என மருத்துவர்கள் கோரிக்கை 
அரசு மருத்துவமனை புதிய கட்டிடப் பணிகளை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், பெருந்தலைவர் காமராஜர் அரசு மருத்துவமனை பல வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக் கட்டிடம் பழுதடைந்த நிலையில் புதிய கட்டிடம் கட்டித் தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.  பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக் குமார், சட்டப்பேரவையில் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டித் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூபாய் 5 கோடி பேராவூரணி அரசு மருத்துவமனை வளர்ச்சிக்காக ஒதுக்கினார்.  இந்நிலையில், தற்போது ரூபாய் 4 கோடியில், 3 தளங்களுடன் கூடிய கட்டடப் பணியும், ஒரு கோடி ரூபாயில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் புதிய கட்டடப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்த ஒப்பந்ததாரர் மற்றும் பணியாளர்கள் நடைபெற்று வரும் வேலைகள் குறித்து விளக்கினர்.  அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை ஆண்கள் வார்டு, மருந்து கொடுக்கும் இடம், ஊசி போடும் இடம் ஆகியவற்றில் ஆய்வு செய்த அவர், உள்நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடமும், கோரிக்கைகள் குறித்து நோயாளிகளிடமும் கேட்டறிந்தார்.  அரசு மருத்துவமனைக்கு துப்புரவு பணியாளர்கள், புதிய கட்டிடத்தில் மின் தூக்கி (லிஃப்ட்) வசதி செய்து தர வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  அப்போது அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் எஸ்.சேகர், மருத்துவர்கள் பி.ராமசாமி, டி.சினேகா, கே.பிரசன்ன வெங்கடேஷ்,  எம்.சுரேஷ்குமார், மருந்தாளுனர் கே.ரமேஷ், தலைமை செவிலியர் சித்ரா மற்றும் நாடங்காடு மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story