முசிறி அருகே நெய்வேலி கிராமத்தில் மீன்பிடி திருவிழா

முசிறி அருகே நெய்வேலி கிராமத்தில் மீன்பிடி திருவிழா
X
திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஏரியில் மீன்பிடித்து மகிழ்ந்தனர்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே நெய்வேலி கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பாசன ஏரி அமைந்துள்ளது. கொல்லிமலையில் இருந்து உருவாகும் அய்யாறு வாய்க்கால் மூலம் மழை காலங்களில் இந்த ஏரிக்கு வரும் தண்ணீரால் இப்பகுதியில் சுற்றி உள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெறும். தற்போது இந்த ஏரியில் தண்ணீர் குறைவாக உள்ள நிலையில் ஏரியில் கிராம மக்கள் மீன் பிடி திருவிழா நடத்திட முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று கோமங்கலம், சித்தாம்பூர், வீரமணிபட்டி, பேரூர், பொன்னாங்கனிப்பட்டி, தண்டலைப்புத்தூர் உள்ளிட்ட சுமார் 20 - க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் காலை முதலே மீன்பிடி வலைகளுடன் ஏரியில் குவிந்தனர். பின்னர் பூனாட்சி அம்மன் கோவிலில் பொதுமக்கள், முக்கியஸ்தர்கள் வழிபாடு நடத்தி கிராமத் தலைவர் கொடியேசைத்ததும் பொதுமக்கள் ஆரவாரத்துடன் ஏரியில் இறங்கி மீன்பிடித்தனர். அப்போது கத்தா, சுருக்குவலை, அரிவலை, கொசுவலை, தூரி ஆகியவற்றின் உதவியோடு பொதுமக்கள் மீன்களை அள்ளி சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் நெய்வேலி ஏரியில் மீன்பிடி திருவிழா நடத்தியதால் எங்களுக்கு நிறைய மீன்கள் கிடைத்தது. சாதி, மத பேதமின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து ஏரியில் மீன் பிடித்தது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்று தெரிவித்தனர். பொதுமக்கள் விரித்த வலையில் விரால், கெண்டை, மசிரை, கெளுத்தி, சங்கரா, ஜிலேபி, வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தது. வருடந்தோறும் நடைபெறும் மீன்பிடி திருவிழாவில் இந்த வருடம் கடந்த வருடத்தை விட அதிகமாகவே மீன்கள் கிடைத்ததாகவும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Next Story