கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி

பெரம்பலூர் மாவட்டம் 7வது சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி பணிகள் ஜூலை 02-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதால் கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச. அருண்ராஜ், தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்கள் 4 பேரூராட்சிகளில் உள்ள அனைத்து கிராமங்கள், குக்கிராமங்கள் மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தகுதியுள்ள 1.19 லட்சம் பசு மற்றும் எருமை இனங்களுக்கு, தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் (NADCP) கீழ் 7வது சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி பணி ஜூலை 02-ஆம் தேதி முதல் தொடங்கி 21 நாட்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் ஜூலை 31 ஆம்தேதி வரை உள்ள காலத்தில் விடுபட்ட கால்நடைகளுக்கும் தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. நான்கு மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து கறவையில் உள்ள, சினை உள்ளிட்ட பசு, எருமை மற்றும் எருதுகளுக்கும் தடுப்பூசி பணி முகாம்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடுவதற்கு முன்பாக அனைத்து கால்நடைகளுக்கும் தனித்துவ 12 இலக்கு எண் கொண்ட காதுவில்லை அணிவித்து, கால்நடை தொடர்பான விபரங்களை Bharat Pashudhan Portal – இல் பதிவேற்றம் செய்யப்படுவது ஒன்றிய அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே கால்நடைவளர்ப்போர், கால்நடை பராமரிப்புத் துறையினர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி பணிக்கு வரும்பொழுது அனைத்து கால்நடைகளுக்கும் அடையாள காதுவில்லை பொருத்தி 100% கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Next Story

