நிழற்குடையை ஆக்கிரமித்த கடைகளால் பயணியருக்கு இடையூறு

நிழற்குடையை ஆக்கிரமித்த கடைகளால் பயணியருக்கு இடையூறு
X
நிழற்குடையை ஆக்கிரமித்து கடை அமைப்போர் மீது, பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி, புக்கத்துறை நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் செங்கல்பட்டு, சென்னை, தாம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நின்று செல்கின்றன. இங்கு, 2024ல், பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று, வார விடுமுறை நாள் என்பதால், இந்த பயணியர் நிழற்குடையில் மீன், இறைச்சி கடைகள் வைக்கப்பட்டன. கடைக்கு வந்த மக்கள், பயணியர் நிழற்குடை முன், தங்களுடைய பைக்குகளை நிறுத்தினர். இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், நிழற்குடையின் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வெயிலிலே நின்று பேருந்து பிடித்து சென்றனர். அதில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பயணியர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர்ந்து, வார விடுமுறை நாட்களில் இதுபோன்று பயணியர் நிழற்குடையை ஆக்கிரமித்து திடீர் கடைகள் உருவாகி வருகின்றன. எனவே, நிழற்குடையை ஆக்கிரமித்து கடை அமைப்போர் மீது, பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story