மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என ஒரத்தநாடு ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, வீரரத்னா திருமண மண்டபத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், 4 ஆவது ஒன்றிய மாநாடு, ஒன்றியத் தலைவர் எம்.தங்கப்பன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. வி.சிவகுமார் சங்கக் கொடியினை ஏற்றினார். எம்.பாலசுப்பிரமணியன் அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். எம்.பழனிவேல் ராஜன் வரவேற்றார். ஒன்றியச் செயலாளர் எஸ்.மதியழகன் வேலை அறிக்கை வாசித்தார். சங்க மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் துவக்கவுரையாற்றினார். மாவட்டத் தலைவர் டி.கஸ்தூரி, பிரபு சுந்தர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலக்குழு உறுப்பினர் டி.கணேசன் நிறைவுரையாற்றினார். முடிவில், கிருஷ்ணா நன்றி கூறினார். மாவட்ட நிர்வாகிகள் கோவி.ராதிகா, சி.ஏ.சந்திர பிரகாஷ், ஏ.சாமி அப்பன், ஏ.மேனகா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் மாநாட்டில் 27 பேர் கொண்ட புதிய ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. இதில் ஒன்றியத் தலைவராக பழனிவேல் ராஜன், ஒன்றியச் செயலாளராக எஸ்.மதியழகன், ஒன்றியப் பொருளாளராக வி.சிவக்குமார், துணைத் தலைவர்களாக எம்.தங்கப்பன், குமுதம், சரளாதேவி, துணைச் செயலாளர்களாக ஜி.சங்கர், எம்.பாலசுப்பிரமணியன், கிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் ஆந்திரா மாநிலத்தைப் போன்று, தமிழ்நாட்டிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூபாய் 6,000, ரூபாய் 10,000, ரூபாய் 15,000 என உயர்த்தி வழங்கிட வேண்டும். மாற்றுத் திறனாளிகள் உள்ள குடும்ப அட்டைகளை அந்தியோதயா அன்னயோஜனா (ஏஏஒய்) திட்ட குடும்ப அட்டையாக மாற்றி, மாதந்தோறும் 35 கிலோ இலவச அரிசி வழங்கிட வேண்டும். தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில் தொடங்கிட வங்கிகளில் கடன் வழங்கிட வேண்டும். ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் 100 நாள் வேலையை தவறாமல் வழங்கிட வேண்டும். அதோடு மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேரம் மட்டுமே வேலை என்பதை முறைப்படுத்திட வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story