வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் 

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் 
X
உதவித்தொகை
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2006-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். 2020-ம் ஆண்டு ஜூன் -30-ஆம் தேதியன்று அல்லது அதற்கும் முன்பாக பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200/-ம், பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300/-ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400/-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600/-ம் என வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தாங்கள் பொதுப்பிரிவினராக இருந்தால் 40 வயதிற்குள்ளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினராக இருந்தால் 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.72,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதிவகுப்புவரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.600/-ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750/-ம். பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1000/-ம், உதவித்தொகையாக 10-ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. பதிவுசெய்து 2025-ம் ஆண்டு ஜூன் -30-ஆம் தேதி அன்று ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற பதிவு செய்து 1 ஆண்டு முடிவுற்றிருக்க வேண்டும்.  மாற்றுத்திறனாளி மனுதாரராக இருந்தால், அனைத்து வகுப்பினருக்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. அவ்வாறு வயது வரம்பு ஏதுமின்றி உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை இதுவரை எங்கும் பெறவில்லை என தங்கள் ஊரின் கிராம நிர்வாக அலுவலர் மூலம் சுயசான்று அளித்து உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம். உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேர மாணவராக இருத்தல் கூடாது, ஆயினும் தொலைதூரக்கல்வி (Distance Education) பயில்பவராக இருக்கலாம். அரசுத்துறை அல்லது தனியார் துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருக்கக்கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். மேலும் எந்த ஒரு அரசு திட்டத்திலும் உதவித்தொகை பெறுபவராக இருத்தல் கூடாது. தகுதி உடையவர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப்படிவத்தில் அனைத்து கலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகலுடன் ஆகஸ்ட் மாதத்திற்குள் அலுவலக வேலைநாட்களில் மணிமண்டபம் எதிரில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தஞ்சாவூரில் நேரில் அளிக்க வேண்டும். உதவித்தொகை ஏற்கெனவே பெற்று வருவோரின் கவனத்திற்கு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து வருடங்களுக்கும், பொதுப்பிரிவினர்களுக்கு மூன்று வருடங்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை தொடங்கிய காலத்திலிருந்து பயனாளிகள் ஒவ்வொரு ஆண்டிலும் சுய உறுதிமொழி ஆவணம் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். அவ்வாறு சுய உறுதிமொழி ஆவணம் அளிக்கத் தவறியவர்கள் உடன் சுய உறுதிமொழி ஆவணத்தை பூர்த்தி செய்து தவறாது நேரில் வந்து அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
Next Story