சென்னிமலை அருகே சிறுத்தை நடமாட்டம்

X
சென்னிமலை அருகே தோட்டத்தில் கட்டியிருந்த நாயை சிறுத்தை கடித்து கொன்றதை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். சென்னிமலை அருகே வனப்பகுதியை ஒட்டி, சில்லாங்காட்டுவலசு, வெப்பிலி கிராமங்கள் உள்ளன. இங்குள்ள தோட்டங்களில் இரவு நேரத்தில் சிறுத்தை புகுந்து ஆடு, கன்றுக்குட்டி மற்றும் நாய்களை கடித்து கொன்று வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், சிறுத்தையை உயிருடன் பிடிக்க கூண்டு வைத்து, வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இருப்பினும், கடந்த வாரம் வெப்பிலி பகுதியில் உள்ள தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, அங்கு கட்டியிருந்த நாயை கடித்துக் கொன்றது. இந்நிலையில், சில்லாங்காட்டுவலசு குழுவக்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி செல்லக்குட்டி (70). இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கால்நடைகளை தோட்டத்தில் கட்டி வைத்துவிட்டு, அங்கு நாயையும் கட்டி வைத்து விட்டு சென்றிருக்கிறார். பின்னர் நேற்று காலையில் செல்லக்குட்டி தனது தோட்டத்துக்கு சென்றுள்ளார். அங்கு கட்டப்பட்டிருந்த நாயை சிறுத்தை புலி கடித்து கொன்று தின்று விட்டு, பாதி உடலை அங்கேயே போட்டு விட்டு சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செல்லக்குட்டி, சென்னிமலை வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், பாதி உடலுடன் கிடந்த நாயை பார்வையிட்டனர். தொடர்ந்து அங்கு வந்த புதுப்பாளையம் கால்நடை மருத்துவர்கள் நாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். இதுவரை வனப்பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்களில் மட்டுமே கால்நடைகள் மற்றும் நாயை கடித்துக் கொன்ற சிறுத்தை, தற்போது மக்கள் அதிகளவில் நடமாட்டம் இருக்கும் பகுதிக்கே வந்து கால்நடைகள், நாய்களை கடித்து கொல்வதால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Next Story

