பாலத்தில் சரக்கு வேன் சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு

X
சென்னிமலை அருகே பெருந்துறை ஆர்.எஸ் வழியாக வெள்ளோடு நோக்கி நேற்று மதியம் சரக்கு வேன் ஒன்று காய்கறிகள் வைக்கும் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது அங்குள்ள ரயில்வே நுழைவு பாலம் வழியாக சென்ற போது பாலத்திற்கு முன்பாக பாதுகாப்புக்காக நடப்பட்டிருந்த இரும்பு ஆங்கிலுக்குள் எளிதாக வேன் நுழைந்து விட்டது. ஆனால் பாலத்தை கடந்து வெளியே வரும் போது அங்குள்ள மற்றொரு இரும்பு ஆங்கிலில் வேனில் கட்டப்பட்டிருந்த காய்கறி பெட்டிகள் சிக்கி கொண்டதால் வேன் செல்ல முடியவில்லை. இதனால் வெள்ளோடு மற்றும் சென்னிமலையை நோக்கி வேனுக்கு பின்னால் வந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கார் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அதேபோல் சென்னிமலை மற்றும் வெள்ளோட்டிலிருந்து சென்ற வாகனங்களும் செல்ல முடியாமல் நின்றதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அதனால் சரக்கு வேணில் உயரமாக கட்டப்பட்டிருந்த காய்கறி பெட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்து அதன் உயரத்தை குறைத்த பிறகே இரும்பு ஆங்கிலை விட்டு சரக்கு வேன் வெளியே வர முடிந்தது. இந்த சம்பவத்தால் நுழைவு பாலத்தின் இருபுறமும் கார்கள், பஸ்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் அரை மணி நேரம் காத்திருந்து அதன் பிறகு சென்றது.
Next Story

