நான்காம் கட்டமாக சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது.

X
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (11.07.2025) பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களை உயர்கல்வியில் சேர்ப்பது தொடர்பான நான்காம் கட்டமாக சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசு, மாணவர்களின் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களை அதிகமாக உயர்கல்விக்கு சேர்க்கைபெறும் நோக்கில், பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாவட்டத்தில் மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட கல்வி உதவி மையம் செயல்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் விருதுநகர் கல்வி அறக்கட்டளை என்ற அறக்கட்டளையின் மூலம் எந்த உதவியும் கிடைக்க முடியாத வறுமை நிலையில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு அனைத்து உதவிகளும், தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள், உதவி மையங்கள் மூலம் மாணவர்களின் கல்விக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, உயல்கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்காத மாணவர்களின் குறைகளை கண்டறிந்து, அவர்களுக்கான வழிகாட்டுதலை வழங்கும் வகையில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17.05.2025, 31.05.2025 மற்றும் 13.06.2025 ஆகிய தினங்களில் நடைபெற்றது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற 80 மாணவர்களின் குறைகள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து, அவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, இன்று நான்காம் கட்டமாக சிறப்பு குறைதீரக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலந்து கொண்ட 35 மாணவர்களிடமிருந்து, உயர்கல்வி பயில்வதற்கான சந்தேகங்கள் மற்றும் குறைகளையும் கேட்டறிந்து மாணவர்கள் உயர்கல்வி சேர்வதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. இக்கூட்டத்தில் குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், சரியான வழிகாட்டுதலின்மை, பாடப்பிரிவு கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் உயர்கல்வி தொடரமுடியாமல் இருப்பதாக தெரிவித்த மாணவ, மாணவியர்களிடம் அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள், சலுகைகள், ஊக்கத்தொகைகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு பாடப்பிரிவு துறைகளை தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவை குறித்தும், தீர்வுகளை எடுத்துக்கூறியும், உயர்கல்வி பயில்வதற்கான உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
Next Story

