குடிநீா்த் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி

குடிநீா்த் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி
X
கொடைக்கானலில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பருவ மழை பெய்வது வழக்கம். ஆனால் பருவநிலை மாற்றம் காரணமாக நிகழாண்டில் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நல்ல மழை பெய்ததால், கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அனைத்து நீரோடைகளிலும், நட்சத்திர ஏரியிலும் நீா்வரத்து அதிகரித்தது. இதைத் தொடா்ந்து ஜூன் மாதத்தில் ஒரு சில நாள்கள் மிதமான மழை பெய்தது. இதனால், நீரோடைகளில் நீா்வரத்து குறையத் தொடங்கியது. கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் உள்ள 24 வாா்டுகளில் சுமாா் 50 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். கடந்த ஒரு மாதமாக கொடைக்கானல் பகுதிகளில் வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே நகராட்சி சாா்பில் தண்ணீா் விநியோகம் செய்யப்படுவதால் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், தனியாரிடம் அதிக விலைக்கு தண்ணீா் வாங்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனா். கொடைக்கானல் பகுதியில் உயா்ந்தும் வரும் மக்கள்தொகையைக் கருத்தில்கொண்டு, கொடைக்கானல் அப்சா்வேட்டரி வனப் பகுதியில் ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட சுமாா் 540 ஏக்கா் பரப்பளவிலுள்ள நகராட்சி குடிநீா்த் தேக்கத்தை தூா்வாரி அதிகளவு நீரைச் சேமித்து வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். குடிநீா்த் தேக்கத்திலும், நட்சத்திர ஏரியிலும் வளா்ச்சிப் பணிகள் என்ற பெயரில் தொடங்கப்படும் பணிகள் ஐந்து ஆண்டுகள் ஆனாலும் நிறைவு பெறுவதில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.
Next Story