பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி சேலத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

X
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோ ஜாக் சார்பில் நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் நாகராஜன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் தடையை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து சேலம் டவுன் உதவி கமிஷனர் ஹரிசங்கரி தலைமையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மொத்தம் 135 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். அதன்பிறகு சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டனர்.
Next Story

