ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோயிலில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு

ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோயிலில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு
X
பைரவர்களுக்கு சிறப்பு யாகம், அபிஷேகம். மகா தீபாராதனை
நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த திருவாய்மூரில், பிரசித்தி பெற்ற  சப்தவிடங்க ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. காசிக்கு  அடுத்தபடியாக சத்ரு சம்ஹார பைரவர், அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், கபால பைரவர், உன்மத்த பைரவர், பீஷண பைரவர் ஆகிய 8 பைரவர்கள் ஒரே நேர்கோட்டில் அஷ்ட பைரவர் சன்னதியில் அருள்பாலித்து வருவது இக்கோயிலுக்குரிய தனிச்சிறப்பாகும்.ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி, ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாகம்  சிவாச்சாரியார் பிச்சைமணி தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நாதஸ்வர வித்துவான் டி.ஆர்.பி.அருள்மொழிகார்த்திக்  குழுவினரின் மேளதாள இன்னிசையுடன், கடம் கோயிலை சுற்றி எடுத்து வரப்பட்டு  கடத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு அஷ்ட பைரவர்களுக்கு சிறப்பு அபிஷேகம்  நடைபெற்றது. அஷ்ட பைரவர்களுக்கு பல வண்ண மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், நாகை மட்டுமின்றி மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story