கரூரில் ,ஆபரேஷன் சிந்தூர் பெயரில் மூன்று லட்சம் ராக்கிகளை அனுப்பிய பரணி பார்க் பள்ளி நிர்வாகம்.
கரூரை அடுத்த வெண்ணை மலையில் செயல்படும் பரணி பார்க் கல்விக் குழும ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பாக தொடர்ந்து 9ம் ஆண்டாக, இந்த ஆண்டில் மூன்று லட்சம் ராக்கி கயிறுகள் ராணுவ வீரர்களுக்கு இன்று காலை அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது. தேசிய மாணவர் படையின் தமிழ்நாடு 2 ஆர்மர்டு ஸ்குவாட்ரன் பட்டாலியன் கமாண்டிங் ஆபிசர், ராணுவ கர்னல். நீரஜ் உனியால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கொடியசைத்து ராக்கி கயிறுகளை புதுதில்லி ராணுவ தலைமையகத்திற்கு அனுப்பி வைத்தார். ஆசிரியர்களும் மாணவர்களும் அவருக்கு அன்போடு ராக்கி கயிறுகளை அணிவித்து இந்திய முப்படைகளுக்கு பெருமித உணர்வுடன் நன்றி கூறினர். கடந்த 2017 முதல் பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன் தலைமையில் ஆசிரியர்களும் மானவர்களும் இணைந்து தங்களது ஓய்வு நேரங்களில் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக லட்சக்கணக்கில் ராக்கி கயிறுகளைத் தயாரித்து நமது முப்படை வீர்ர்களுக்கு ஆண்டுதோறும் அனுப்பி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நடப்பு ஆண்டில் நமது தாய்நாட்டின் ஆபரேசன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் விதமாக 18 மொழிகளில் திருக்குறள் பொறிக்கப்பட்ட அறுபதாயிரம் ‘ஆபரேஷன் சிந்தூர் ராக்கி கயிறுகள்’, இந்திய முப்படைகளின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் வகையில் 18 மொழிகளில் திருக்குறள் பொறிக்கப்பட்ட ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ‘பரம் வீர் சக்ரா ராக்கி கயிறுகள்’, மேலும் ஒரு லட்சம் ‘அலங்கார சிறப்பு ராக்கி கயிறுகள்’ என மொத்தம் மூன்று லட்சம் ராக்கி கயிறுகளை தயாரித்தனர். இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பரணிபார்க் கல்விக் குழும தாளாளர் மோகனரங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி முன்னிலை வகித்தனர். பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன், கல்விக் குழும முதல்வர்கள் சுதாதேவி, சேகர், சாந்தி, பரணி பார்க் சாரணர் மாவட்ட செயலர் பிரியா, தேசிய மாணவர் படை அலுவலர்கள் செல்வராசு, மனோஜ்குமார், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சரவணன், ஆசிரியர்கள், மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். ஜெய் ஜவான் ஜெய்ஹிந்த் கோஷங்களை எழுப்பினர்.
Next Story







