கூட்டுறவு சங்கங்களில் கடனில்லா சான்று கேட்பதைக் கைவிட வலியுறுத்தல்

கூட்டுறவு சங்கங்களில் கடனில்லா சான்று கேட்பதைக் கைவிட வலியுறுத்தல்
X
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கூட்டுறவு சங்கங்களில் கடன் கோரும் விவசாயிகளிடம் கடனில்லா சான்று கேட்பதைக் கைவிட வேண்டும் என தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கோட்டாட்சியர் செ.இலக்கியா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி கோரிக்கைகள்: அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி 1.10 லட்சம் ஏக்கரில் செய்யப்பட்டுள்ள நிலையில், குறுவை தொகுப்பு திட்டத்தில் 32 ஆயிரத்து 450 ஏக்கருக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், குறுவை தொகுப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க ஜூலை 31 ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தண்ணீர் வராத நிலையில் பயனாளிகள் எண்ணிக்கையை நான்கில் ஒரு பங்காக குறைப்பதும், விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை குறைத்திருப்பதும் கண்டிக்கத்தக்கது. எனவே, கால அவகாசத்தை ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். தோழகிரிப்பட்டி பி.கோவிந்தராஜ்: பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு சொந்தமாக நிலம் இருந்தால்தான் காப்பீடு செய்ய முடியும் என்றும், குத்தகை நிலமாக இருந்தால் செய்ய முடியாது எனவும் கூறுவதை ஏற்க முடியாது. குத்தகை விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்பலாப்பட்டு  அ.தங்கவேல்: கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் விநாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், தற்போது 2,500 கன அடி வீதம் மட்டுமே விடப்படுவதால், வடகாடு வாய்க்காலில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. காவிரி நீர் வரத்து அதிகமாக உள்ள நிலையில், கல்லணைக் கால்வாயில் ஏன் குறைவாக விடப்படுகிறது. எனவே, கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் கிடைக்கும் விதமாக கல்லணைக் கால்வாயில் முழுமையாக தண்ணீர் விட வேண்டும். பெரமூர் ஆர்.அறிவழகன்: தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் கோரும் விவசாயிகளிடம் சிபில் அறிக்கை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து கடன் இல்லை என்ற சான்றை வாங்கி வருமாறு கூறுவது ஏற்புடையதல்ல. இதை உடனடியாகக் கைவிட்டு, பழைய நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். ராயமுண்டான்பட்டி  வெ.ஜீவகுமார்: கல்லணைக்கு தெற்கே ராஜராஜ சோழன் காலத்திலிருந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இப்பகுதிக்கு செல்லும் உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய்க்கு இன்னும் தண்ணீர் விடப்படாததால், சாகுபடிப் பணிகள் தொடங்கப்படவில்லை. இக்கால்வாயில் எப்போது தண்ணீர் விடப்படும் என அறிவிக்க வேண்டும். வெள்ளாம்பெரம்பூர் துரை. ரமேஷ்: வெள்ளாம்பெரம்பூர் பகுதியில் பிள்ளைவாய்க்கால் வலது கரையில் விவசாய பயன்பாட்டுக்கான தார் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இது தொடர்பாக பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இச்சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
Next Story