குமரி : அவ்வையார் அம்மனை வழிபட்ட பெண்கள்

X
கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி அருகே பூதப்பாண்டி செல்லும் சாலையில் அவ்வையார் அம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆடி மாதம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உள்ளூர் மட்டுமல்ல பிற மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் பெண்கள் திரளாக வந்து வழிபடுவார்கள். அந்தவகையில் இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் செவ்வாய்க் கிழமையையொட்டி இன்று காலையிலிருந்தே உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து பெண்கள் குடும்பம் குடும்பமாக வாகனங்களில் வந்தனர். அவர்கள் கோவில் வளாகத்திலும், அருகில் உள்ள தோப்புகளிலும் முகாமிட்டு, தாங்கள் கொண்டுவந்த பொருள்களை கொண்டு கூழ், கொழுக்கட்டை மற்றும் சர்க்கரை பொங்கல் தயார் செய்து அவ்வையார் அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். ஆடி முதல் செவ்வாயை முன்னிட்டு அம்மனுக்கு மதியம் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். மேலும் அங்குள்ள பிற சன்னதிகளிலும் வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காக நாகர்கோவிலிலிருந்து தாழக்குடி, மற்றும் செண்பகராமன்புதூர் வழியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் கோவிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story

