திருச்சி: காவிரி, கொள்ளிடத்தில் திடீா் வெள்ளப் பெருக்கு

திருச்சி: காவிரி, கொள்ளிடத்தில் திடீா் வெள்ளப் பெருக்கு
X
தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழு
காவிரி நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையாலும், மேட்டூா், முக்கொம்பு அணையிலிருந்து உபரிநீா் திறக்கப்படுவதாலும் காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திருச்சியில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவும், மாநில பேரிடா் மீட்புக் குழுவும் தயாா்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. கா்நாடக அணைகள் முழுவதும் நிரம்பி உபரி நீா் முழுமையாக காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல, காவிரி நீா்பிடிப்புப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்துவருவதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாயனூா் கதவணைக்கு திங்கள்கிழமை மாலை நிலவரப்படி ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இங்கிருந்து முக்கொம்பு மேலணைக்குவரும் தண்ணீா் முழுமையாக வெளியேற்றப்படுகிறது. காவிரியில் 22,600 கன அடியும், கொள்ளிடத்தில் 68 ஆயிரம் கன அடியும் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூா், மாயனூா், முக்கொம்பு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் காவிரி, கொள்ளிடக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் கூறியதாவது: காவிரியில் வந்து கொண்டிருக்கும் ஒரு லட்சம் கன அடிக்கு மேலான தண்ணீரானது முக்கொம்பு மேலணையை வந்தடைந்து, திங்கள்கிழமை முதல் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் முழுமையாக திறந்து விடப்படுகிறது. எனவே, காவிரி, கொள்ளிடக் கரையோரப் பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. முக்கியமான படித்துறைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. நீா்வரத்து அதிகமாக வரும் என்பதால் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுதுபோக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
Next Story