உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் நீர் திறப்பு

உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் நீர் திறப்பு
X
பாசனம்
செங்கிப்பட்டி பகுதி பாசனத்துக்காக தஞ்சாவூர் மாவட்டம்,  செங்கிப்பட்டி பகுதி பாசனத்துக்காக உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் இருந்து திங்கள்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. கரூர் மாவட்டம், மாயனூரில் இருந்து பிரியும் உய்யக்கொண்டான் வாய்க்கால், திருச்சி வழியாக வாழவந்தான்கோட்டை ஏரியில் கலக்கிறது. பின்னர், அங்கிருந்து உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலாக செங்கிப்பட்டி பகுதியில் உள்ள 35 ஏரி, குளங்களை நிரப்பி, அதைத்தொடர்ந்து ராயமுண்டான்பட்டி, வெண்டையம்பட்டி, சுரக்குடிப்பட்டி. கோட்டரப்பட்டி, ஆவரம்பட்டி, நவலூர், புதுத்தெரு உள்ளிட்ட 20 கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வசதி அளித்து வருகிறது. டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், செங்கிப்பட்டி பகுதி பாசனத்துக்கு நீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.  இதையடுத்து, வாழவந்தான் கோட்டை ஏரியில் இருந்து உய்யக் கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் சம்பா சாகுபடி பாசனத்துக்காக திங்கள்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது.  இதில், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் பங்கேற்று தண்ணீரை திறந்து விட்டார். நீர்வளத் துறை பொறியாளர்கள் முருகானந்தம், ரஞ்சித், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், பூதலூர் முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் கல்லணை செல்லக்கண்ணு, திமுக ஒன்றியச் செயலாளர்கள் முருகானந்தம், அசோக்குமார், சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், வெண்டையம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிவகுமார் உட்பட விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story