சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு ஆயுள் தண்டனை

X
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை கூழவாரித் தெருவைச் சேர்ந்தவர் காட்டுராஜா (64). விவசாய கூலித் தொழிலாளி. இவர் 2023 ஆம் ஆண்டு 8 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து, காட்டுராஜாவை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ.தமிழரசி விசாரித்து, காட்டுராஜாவுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
Next Story

