மாற்றுத் திறனாளிகளுக்கு மனைப் பட்டா வழங்க கோரிக்கை
மாற்றுத்திறனாளிகளுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், பட்டுக்கோட்டை ஒன்றிய 3 ஆவது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டையில் சங்கத்தின் ஒன்றிய மூன்றாவது மாநாடு என்.குமார் தலைமையில் நடைபெற்றது. முகமது அலி சங்கக் கொடியேற்றினார். ஒன்றியப் பொறுப்பாளர் எஸ்.மணிகண்டன் வேலை அறிக்கை, நித்யா அஞ்சலி தீர்மானம் வாசித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் பழ.அன்புமணி துவக்கவுரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் ஏ.மேனகா, மாவட்ட துணைச் செயலாளர்கள் சி.ஏ.சந்திர பிரகாஷ், கோவி.ராதிகா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயலர் பி.எம்.இளங்கோவன் நிறைவுரையாற்றினார். புதிய நிர்வாகிகள் மாநாட்டில், புதிய ஒன்றியத் தலைவராக எஸ்.மணிகண்டன், ஒன்றியச் செயலாளராக என்.குமார், ஒன்றியப் பொருளாளராக நித்யா உள்ளிட்ட 17 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானம் ஒன்றிய மாநாட்டில், "வீட்டுமனை, சொந்த வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீடு, வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் சுயதொழில் தொடங்குவதற்கு கடன் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்ப அட்டைகளை ஏஏஒய் குடும்ப அட்டைகளாக மாற்றி மாதம் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கிட வேண்டும். 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்தி, மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேரம் வேலை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆந்திர மாநிலத்தைப் போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகை ரூபாய் 6 ஆயிரம், 10 ஆயிரம் 15 ஆயிரம் என உயர்த்தி வழங்கிட வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story





