காவேரிப்பாக்கம் அருகே விபத்தில் தந்தை மகள் பலி!

X
காவேரிப்பாக்கம் பாபுகம் அடுத்த உப்பரந்தாங்கல், பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 40), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி பிருந்தா (38). இந்த தம்பதியருக்கு தர்ஷினி (10), சுப்ரியா (8), பச்சையம்மாள் (7) ஆகிய மூன்று மகள்கள் உண்டு. இந்தநிலையில், பாபு நேற்று தனது மோட்டார் சைக்கிளில் 3 மகள்களையும் ஏற்றிக்கொண்டு பாணாவரம் நோக்கி காவேரிப்பாக்கம் -சோளிங்கர் நெடுஞ்சா லையில் சென்று கொண்டிருந்தார்.பன்னியூர் கூட்ரோடு அடுத்த ராஜபாளை யம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் சோளிங்கர் சூரைகுளம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் (25) மற்றும் அவரது நண்பர் அரவிந்த் (24) ஆகியோர் எதிர் திசையில் வேகமாக வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பாபு மற்றும் அவரது மகள் பச்சையம்மாள் உள்ளிட்ட 6 பேரும் பலத்த காயமடைந்தனர். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பாபு மற்றும் பச்சையம்மாள் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.இதையடுத்து அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த தர்ஷினி. சுப்ரியா ஆகிய இருவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாண்டியன், அரவிந்தன் ஆகிய இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் தந்தை மகள் உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

