தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்

தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்
X
திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் கொடுத்த பதவியை தக்கவைக்க உண்மைக்கு புறம்பான அறிக்கை அளிப்பதா? என பி.ஆர்.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கிராமப்புறத்தில் விவசாயிகள் இளைஞர்கள் விவசாயத்தை விட்டு வெளியேறி வருவதாகவும், வேலை வாய்ப்பு இல்லாமல் பரிதவிப்பதாகவும், எனவே தொழில் பொருளாதரத்தை உயர்த்துவதற்கான தேவை வந்துள்ளதாகவும், மறைமுகமாக விவசாயத்தை அழிக்கும் நோக்கோடு தமிழக அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் அளித்துள்ள அறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. தனக்கு கொடுத்த பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக தன் முகவரியையே மாற்றிக் கொண்டுள்ளார். வேளாண் வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்காமல், நீராதார திட்டங்களை மேம்படுத்தாமல் அதற்கான தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யாமல் தமிழக அரசு வேளாண்மையை திட்டமிட்டு புறக்கணித்து வருகிறது. விவசாயத்தை நஷ்டமான தொழில் என விளம்பரப்படுத்தி விளைநிலங்களை கார்ப்பரேட்டுகள் அபகரித்துக் கொள்வதற்கு வழிவகை செய்யும் நோக்கோடு அறிக்கை அமைந்துள்ளது. காவிரி டெல்டாவில் 90 சதவீத நிலப்பரப்பும்,பாசன கட்டமைப்பும் தொடர்ந்து விவசாயிகளால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உழவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு 90 சதவிவசாயிகள் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ஜெயரஞ்சன் கூற்றுப்படி காவிரி டெல்டாவில் ஏதாவது ஒரு கிராமத்தில் விளைநிலங்களை விட்டு விவசாயிகள் குடிபெயர்ந்து வெளியேறி இருப்பதாக நிரூபிக்க முடியுமா? தமிழகத்தில் வேளாண்மைக்கு ஆணையம் அமைத்து வேளாண் விளைபொருளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்வதற்கான திட்டங்களை உருவாக்குவதற்கு போராடி வருகிறோம். மாறாக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் அமைக்கப்பட்டு ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசு துணை போகிறது. நான்காண்டு கால ஆட்சியில் தமிழகத்தில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி குறித்து புள்ளி விவரத்தை ஜெயரஞ்சன் வெளியிட தயாரா ?உணவு உற்பத்தி பெருக்கம் குறித்து புள்ளி விவரங்களை வெளியிட தயாரா? விளை நிலங்களை சிப்காட் ஆக மாற்றுவதற்கு கையகப்படுத்தப்பட்ட நிலபரப்பின் புள்ளி விவரங்களை வெளியிட தயாரா ? எனவே உண்மைகளை மூடி மறைத்து வேளாண்மையை அழிக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் தமிழக விவசாயிகள் அனுமதிக்க மாட்டோம். இதேநிலை தொடருமேயானால் தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என எச்சரிக்கிறேன் என்றார்.
Next Story