தஞ்சாவூர் குழந்தைகளுக்கான போதைபொருள் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

X
தஞ்சாவூர் மாவட்டம், திருக்கானூர்பட்டி மைக்கேல் நகர் பகுதியில் இயங்கி வரும் குழந்தைகளுக்கான போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு பெற்றோர் இல்லை. பாட்டி பராமரிப்பில் இருந்து அந்த சிறுவன், தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தனியார் சிறுவர்கள் பராமரிப்பு இல்லத்தில் தங்கி, அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி சிறுவன் தான் தங்கியிருந்த சிறுவர்கள் இல்லத்தின் சுற்றுச்சுவரை தாண்டிக் குதித்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு கார் கண்ணாடியை உடைத்து, அதில் இருந்த பொருளை திருட முயற்சி செய்துள்ளார். இது அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்துள்ளது. தொடர்ந்து கார் உரிமையாளர் இது சம்பந்தமாக புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மறுநாள் ஜூலை 16-ஆம் தேதி காலை 11.30 மணியிலிருந்து சிறுவனை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் அன்று இரவே காவல்துறையினர் சிறுவனைக் கண்டுபிடித்து இல்லக் காப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து இல்லக் காப்பாளர், குழந்தைகள் நலவாரிய அலுவலர்களிடம் சிறுவனை ஒப்படைத்துள்ளார். இதையடுத்து குழந்தைகள் நலவாரிய அலுவலர்கள் திருக்கானூர்பட்டியில் இயங்கி வரும் குழந்தைகளுக்கான போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் கடந்த 18-ஆம் தேதி சேர்த்துள்ளனர். அங்கு தங்கியிருந்த சிறுவன், வெளியே செல்ல முடியாததால் மன உளைச்சலில் இருந்துள்ளான். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதியம் தான் தங்கியிருந்த அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து தகவலறிந்த வல்லம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஷ்ணுபிரசாத் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

