பேராவூரணி அருகே சாலைப் பணி துவக்கி வைப்பு... அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு...

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பின்னவாசல் கிராமத்தில், சாலைப்பணியை துவக்கி வைத்த பின்னர், அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார். பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், பின்னவாசல் ஊராட்சி, பின்னவாசல் முதல் பாங்கிரான்கொல்லை வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய தார்ச்சாலை ரூபாய் 79 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. இதனை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் செவ்வாய்க்கிழமை துவக்கி வைத்தார். இதில், திமுக பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், பெரியய்யா, வீரமணி, சிதம்பரம், அன்புச்செல்வன், இளங்கோ, பொன்னுச்சாமி, ஆத்மநாதன் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர். ஆய்வு அதனைத் தொடர்ந்து, பின்னவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், அங்கிருந்த மருத்துவ பயனாளிகளிடம் (நோயாளிகள்) உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மருத்துவ அலுவலர் டாக்டர் சரண்யா தலைமையில், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் சட்டமன்ற உறுப்பினரை வரவேற்றனர். அப்போது, "ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச் சுவர் அமைத்து தர வேண்டும். சேதமடைந்துள்ள சுவர்கள், தரைத்தளத்தை சீரமைத்து தரவேண்டும்" என கோரிக்கை விடுத்தனர். அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார். அப்போது, அங்கிருந்த மாற்றுத்திறனாளி ஒருவர், 'தனக்கு மூன்று சக்கர ஸ்கூட்டி வழங்க வேண்டும்' என சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
Next Story

