சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு காட்சி நடைபெற்றது

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு காட்சி நடைபெற்றது
X
சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு காட்சி நடைபெற்றது
தென்தமிழகத்தில் அமைந்துள்ள சிவ தலங்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவிலும் கோவிலும் ஒன்று. அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் இங்கு ஆண்டுதோறும் ஆடிமாதம் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டின் ஆடித்தபசு திருவிழா கடந்த 28-ம் தேதி கோமதி அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 தினங்கள் நடைபெறும் இத் திருவிழாவில் கோமதி அம்பாள் தினமும் காலை, இரவு பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திருவிழாவின் சிகர நிகழ்வான ஆடித்தபசு திருவிழா இன்று நடைபெற்றது. இதற்காக அதிகாலை கோயிலின் நடை திறக்கப்பட்டு, காலை 5 மணிக்கு மூலஸ்தான சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக, அலங்கார, தீபாராதனைகள் காட்டப்பட்டது. தொடா்ந்து நண்பகலில் திருக்கோயில் அபிஷேக மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோமதி அம்பாள் தவக்கோலத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி தவசு மண்டபத்தை அடைந்து, அங்கு தவக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் சுவாமி சங்கரநாராயணராக வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதி தபசு பந்தலை அடைந்தாா். அங்கு சுவாமி அம்பாள் மாலை மாற்றும் நிகழ்வும் புது வஸ்திரங்கள் சாற்றி பஞ்ச தட்டு கற்பூரஆரத்தி காண்பிக்கப்பட்டது. முதல் காட்சியாக ஹரியும் சிவனும் ஒன்று என்னும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்துவதற்காக சுவாமியை அம்பாள் மூன்று முறை சுற்றி வந்த பின்னர் சுவாமி அம்பாளுக்கும், உலக மக்களுக்கும் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசுகாட்சி நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. அம்பாள் மீண்டும் தவசு மண்டபத்தில் தவமிருக்க, இரவில் சுவாமி வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுக்கும் இரண்டாம் தவசு காட்சி நடைபெற்றது. தன் தபசினால் தன் மணாளனை கண்ட அம்பிகையும் மகிழ்வுடன் சுவாமியுடன் கோவிலுக்குள் ஏழுந்தருளினாா். தபசுக் காட்சியில் பக்தா்கள் தங்கள் பகுதியில் விளைந்த பருத்தி, மிளகாய் போன்ற விளைபொருட்களை அம்பாள் மீது வீசி ஏறிந்தனா். சங்கரநாராயணசுவாமி கோவில் ஆடித்தவசு திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு குவிந்தனர். திருவிழா ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினா் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரா்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story