கடலில் கலக்கும் லட்சக்கணக்கான கன அடி தண்ணீர்.... கடைமடை ஏரிகளுக்கு சென்றடையாத அவலம்

X
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு, முக்கொம்பு வழியாக கல்லணைக்கு வந்த தண்ணீர், ஏரி, குளங்களுக்கு சென்றடையாமல், வீணாக கடலில் கலந்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகா மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா போன்றவை வறட்சிப் பகுதியாக இருந்தன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், ராணுவப்பொறியாளர் கர்னல் டபிள்யூ.எம்.எல்லிஸ் என்பவர் கல்லணை கால்வாயை வடிவமைத்தார். கல்லணை தலைப்பில் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம், மும்பாலை வரை 149 கி.மீ., நீளமுள்ள இந்த கல்லணை ஆற்றில், 'ஏ' கால்வாயில் இருந்து பி, சி, டி, இ., என 337 கிளை வாய்க்கால்கள் மொத்தம் 1,232 கி.மீ., நீளம் உள்ளன. செயற்கையாக மனித உழைப்பால் உருவாக்கப்பட்ட கல்லணைக் கால்வாயில் கழிவுநீரும், காட்டாற்றுத் தண்ணீரும் கலக்காத வகையில், ஆற்றின் குறுக்கே ‘சைபன்’ எனப்படும் சுரங்கங்கள், ‘சூப்பர் பேஸேஜ்’ எனப்படும் மேல்நிலை கால்வாய்கள், பெருவெள்ளக் காலங்களில் காட்டாற்றுத் தண்ணீரை உள்வாங்கி வெளியேற்ற ‘அக்யுடக்ட்’ எனப்படும் கால்வாய் சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தண்ணீரின் விசையை சீராக வைத்திருக்க 505 இடங்களில், ‘டிராப்’ எனப்படும் நீரொழுங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லணை கால்வாய் மூலம் 2.21 லட்சம் ஏக்கர் விவசாய நிலமும், 694 ஏரி, குளங்களும் பயன் பெறுகின்றன. இதில், ஏரி குளங்களுக்கு தண்ணீர் செல்வது சங்கிலித் தொடர் போன்றது. தற்போது, வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளாலும், தூர்ந்து போனதாலும், பல ஏரிகள் தண்ணீர் செல்லாமல் வறண்டும், குறைந்த அளவிலான தண்ணீரோடும் உள்ளன. இதனால், ஏரிப்பாசனத்தை நம்பியுள்ள திருவோணம், ஊரணிபுரம் மற்றும் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் போன்ற கடைமடை பகுதி விவசாயிகள், விவசாயம் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். கீழ்குமுழி உடைந்து வீணாகும் தண்ணீர் மேற்பனைக்காடு ஆற்றில் இருந்து வீரக்குடி பி- பிரிவு கிளை வாய்க்கால் மூலம் ரெட்டவயல், மணக்காடு பகுதிகளுக்கு செல்லும் தண்ணீர், ஏரிகளுக்கு சென்று பாசனத்திற்காக பயன்படுகிறது. ஆனால், வீரக்குடி வாய்க்காலில் தண்ணீர் பிரிக்கும் கீழ்குமுழி பல ஆண்டுகளாக சேதமடைந்து உள்ளது. பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் விவசாயிகள் மனு கொடுத்தும் அதனை சீரமைக்காததால், தண்ணீர் வீணாகச் சென்று கடலில் கலக்கிறது. நீர்வளத்துறையில் நிதி இல்லையென அலுவலர்கள் கூறி வருவதால், விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். விலைக்கு தண்ணீர் வாங்கி விவசாயம் பாசன வாய்க்கால்கள் முறையாக துார் வாராததாலும், ஆக்கிரமிப்புகளால் மறைந்து போனதாலும், ஏரி குளங்களுக்கு தண்ணீர் சென்றடையாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பம்ப்செட் வைத்துள்ளவர்களிடம், ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் வீதம் கொடுத்து, தண்ணீர் வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயிகள் வேதனை: இது குறித்து, மணக்காடு கிராமத்தைச் சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி வீ.கருப்பையா கூறியதாவது: கல்லணைக் கால்வாயின் கடைமடை பகுதி சேதுபாவாசத்திரம். சங்கிலித்தொடர் போன்ற கிளை வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகள் மற்றும் பராமரிப்பின்மையாலும் மறைந்து போயுள்ளன. காவிரி ஆற்றில் லட்சக் கணக்கான கனஅடி தண்ணீர் சென்றாலும், ஏரிகளுக்கு தண்ணீர் வர, பல மாதங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில ஏரிகளில் மழை பெய்தால் தான் தண்ணீர் தேங்குகிறது. கல்லணை கால்வாய் மேம்பாட்டுக்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டாலும், மெயின் வாய்க்காலும், ஆறுகளும் மட்டுமே புனரமைக்கப்பட்டுள்ளன. கிளை வாய்க்கால்கள் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளன. இதனால், ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து இல்லாததால், விவசாயிகள் பலரும் வேறு வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கல்லணைக் கால்வாய், தஞ்சாவூரில் 30 அடி ஆழத்திலும், வெட்டிக்காடு, திருவோணம் பகுதியில் 30 அடி உயரத்திலும் செல்கிறது. திருவோணம் பகுதியில் உள்ள ஏரிகளும், குளங்களும் நிரம்பவில்லை. கிளை வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. ஆறுகளை கண்காணிக்கும் ‘லஸ்கர்’களும் தற்போது இல்லை. இதனால், ஆற்றில் பெருக்கெடுக்கும் தண்ணீர், கடலில் கலந்து வீணாகும் நிலையில், கடைமடை பகுதிகளுக்கு கிடைப்பது மிகவும் அரிதாகியுள்ளது" என்றார்.
Next Story

