சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய அறிவுறுத்தல்

சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய அறிவுறுத்தல்
X
வேளாண் துறை
சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா தனியார் விதை விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில், சம்பா பருவ நெற்பயிர் சாகுபடி செய்யும் பணிகளில் விவசாயிகள் தற்போது தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இந்நிலையில், தனியார் விதை விற்பனையாளர்கள் சான்று விதைகளில் இரு அட்டைகள் (வெள்ளை அல்லது நீலநிறம்) முறையே சான்று அட்டை மற்றும் விவர அட்டை பொருத்தப்பட்ட விதைகளையே விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். விவர அட்டையில் பயிர், ரகம், குவியல் எண், காலாவதி நாள், பயிர் செய்ய ஏற்ற பருவம் உள்ளிட்ட 14 வகையான விவரங்கள் விதைச் சட்ட விதிகளின்படி கட்டாயம் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும். அனைத்து தனியார் விதை விற்பனையாளர்களும், விதை இருப்பு பதிவேடு, கொள்முதல் இன்வாய்ஸ் மற்றும் முளைப்பு அறிக்கை கட்டாயம் பராமரிக்கபட வேண்டும். குவியல் வாரியாக தனித்தனி பக்கங்களில் விதை இருப்பு விவரங்கள் பதிவிட வேண்டும். சம்பா பருவத்துக்கு உகந்த தரமான நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.  நடப்பு சம்பா பருவத்தில் 150 முதல் 160 நாட்கள் வயதுடைய நீண்ட கால நெல் ரகங்கள் ஏற்றவையாகும்.  நீண்ட கால ரகங்களான சாவித்ரி (சி ஆர் 1009),  சி ஆர் 1009 சப் 1 மற்றும் ஏடிடீ 51 போன்ற ரகங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும்.   அதற்கு பின்னர், தொடர்ந்து மத்திய கால நெல் ரகங்கள் ஆன ஏடிடீ 38, ஏடிடீ 39, ஏடிடீ 42, ஏடிடீ 46,  வெள்ளைப் பொன்னி, ஐஆர் 20, கோ 43, கோ 46, கோ 50 மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி போன்ற ரகங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும்.  வெளிமாநில நெல் ரகங்களான பிபீடி 5204, எம்டியூ 7029,  என்எல்ஆர் 34449 போன்ற   விதைகளை விற்பனை செய்யும் போது விற்பனையாளர்கள் படிவம் 2 கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தனியார் விதை விற்பனையாளர்கள் விதைகளை விற்பனை செய்யும் போது விவசாயிகளுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். விற்பனை ரசீதில் விவசாயி மற்றும் குவியல் விவரங்கள் அவசியம் குறிப்பிட வேண்டும்.  நீண்ட கால மற்றும் மத்திய கால நெல் இரகங்கள் 2750 மெ.டன் விதைகள் தனியார் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு இருப்பு வைக்கப்பட்டு உள்ள விதைகளின் முளைப்புத்திறனை உறுதி செய்யும் வகையில் கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை விதை ஆய்வாளர்களால் அலுவலக விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தஞ்சாவூர் விதை பரிசோதனை நிலையத்திற்கு முளைப்புதிறன் பரிசோதனை மேற்கொள்ள அனுப்பபட்டு வருகிறது. எனவே, சம்பா பருவத்துக்கு ஏற்ற நெல் ரகங்களை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில், சம்பா பருவத்துக்கு உகந்தது அல்லாத நெல் ரகங்களை விற்பனை செய்தாலோ, விதை சட்டவிதிகளைப் பின்பற்றாமலோ விற்பனை செய்தால், விதைச் சட்டம் 1966, விதை விதிகள் 1968 மற்றும் விதைக் கட்டுப்பாடு ஆணை 1983 இன் கீழ் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என தஞ்சாவூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story