சேலம் அருகே லாரி டிரைவருக்கு கத்திக்குத்து

X
வாழப்பாடி அருகே சந்திரப்பிள்ளைவலசு பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 43), லாரி டிரைவர். நேற்று இரவு சந்திரப்பிள்ளைவலசு கிராமத்தில் விரைவில் அம்மன் கோவில் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் சார்பில் முன்னேற்பாடு கூட்டம் நடந்தது. அப்போது வேல்முருகனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இவர்கள் இருவருக்கும் குடும்பத்தகராறு காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சுரேஷ் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் வேல்முருகனின் மார்பில் குத்தி கிழித்ததில் வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேல்முருகன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

