தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல உத்தரவு: கைது செய்ய ஆயத்தம்

X
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விட்டதை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும், ஏற்கெனவே என்யூஎல்எம் திட்டம் மூலம் வழங்கப்பட்ட தூய்மைப் பணியை தொடர வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு, இரவு பகலாக அங்கேயே தங்கி இன்று 13-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை பல கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்து, தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில், இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, மேயர் பிரியா, ஆணையர் உள்ளிட்டோர் தூய்மைப் பணியாளர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய காவல் துறை ஆயத்தமாகி வருகிறது. இதனையடுத்து, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் ரிப்பன் மாளிகை முழுவதுமாக காவல் துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தூய்மைப் பணியாளர்களை கைது செய்து அழைத்துச் செல்ல 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தும் தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்லுமாறு காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல மறுக்கும் நிலையில், போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர். போராட்டம் நடத்திவரும் அனைவரும் கலைந்து செல்லவேண்டுமென்றும், இல்லையெனில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று காவல் இணை ஆணையர் விஜயகுமார் எச்சரித்துள்ளார்.
Next Story

