பிரதாபராமபுரம் ஊராட்சி சின்னேரியில் மண் குவாரி

பொதுமக்கள் போராட்டத்தால் வெளியேறிய அதிகாரிகள்
நாகை மாவட்டம் பிரதாபராமபுரம் ஊராட்சியில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சின்னேரியில் 540 மீட்டர் பரப்பளவில் மண் குவாரி அமைக்க மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜேசிபி இயந்திரங்கள், லாரிகள் மண் எடுக்கும் பகுதிக்கு வந்தது. இதனை அறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து எதிர்ப்பு தெரிவித்து வாகனங்களை வெளியேற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் வட்டாட்சியர் கவிதாஸ், கீழையூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், வாகனங்களை சிறைப்பிடித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர், மண் ஏற்றுவதற்கு வந்த வாகனங்களை வெளியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் மண் குவாரி அமைக்க அனுமதி அளித்துள்ளதாக குற்றம்சாட்டிய கிராம மக்கள், நீர்நிலைகளை பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மண் குவாரி அனுமதியை ரத்து செய்ய வேண்டும். பொதுமக்களிடம் ஒப்புதல் பெறாமல் குவாரி அமைக்கக்கூடாது என, தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். பொதுமக்களிடம் அனுமதி பெறமுடியாததால் கனிம வளத்துறை அதிகாரிகள் அமைதியாக வெளியேறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story