தென்காசி அருகே மாவட்ட விளையாட்டு அரங்கம் திறப்பு

X
தென்காசி அருகே பாட்டக்குறிச்சியில் கட்டப்பட்டுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கை தமிழக முதல்வா் காணொலி வாயிலாக திறந்துவைத்தாா். இதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் விளையாட்டு அரங்கில் குத்துவிளக்கேற்றினாா். நிகழ்ச்சியில் ராணி ஸ்ரீ குமாா் எம்.பி., எம்எல்ஏக்கள் எஸ்.பழனிநாடாா், ஈ.ராஜா, தென்காசி சாா் ஆட்சியா் வைஷ்ணவி பால் முன்னிலை வகித்தனா். பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: தென்காசி மாவட்டம், பாட்டக்குறிச்சி கிராமத்தில் 20.46 ஏக்கா் பரப்பளவில் 400 மீ. தடகள ஓடுபாதை (மண்), நீளம் தாண்டுதல், கையுந்துபந்து உள்விளையாட்டரங்கம், கபாடி ஆடுகளம் கொண்ட உள்விளையாட்டரங்கம், கூடைப்பந்து ஆடுகளம், கால்பந்து மைதானம், நவீன உடற்பயிற்சி கூடம், நிா்வாக அலுவலகக் கட்டடம், உணவகம், உடைமாற்றும் அறை, கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ரூ.15 கோடி செலவில் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்துள்ளாா். வீரா், வீராங்கனைகள் இந்த வளாகத்தைப் பயன்படுத்தி பல்வேறு போட்டிகள் சாதனை படைக்க வேண்டும் என்றாா் அவா்.
Next Story

