சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பொம்மம்பட்டி ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி கலந்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பொம்மம்பட்டி ஊராட்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்.நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புற மக்களிடையே அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையிலும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், மகாத்மா காந்தியடிகள் அவர்களின் பிறந்த தினம், உலக தண்ணீர் தினம், உள்ளாட்சிகள் தினம் ஆகிய தினங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டுள்ளார்கள். கிராமம் தான் இந்திய நாட்டின் முதுகெழும்பு. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கிராம பொருளாதார வளர்ச்சி தான் முக்கிய அடிப்படை காரணமாக உள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, 310 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் திட்டங்கள் அனைத்தும் கிராம புறங்களுக்கு சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கிராம புறங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் அனைத்தையும் சமமாக வழங்க வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலைகள், மின்சாரம், குடிநீர், பள்ளிகள், அங்கன்வாடி, நூலகம் என அனைத்தும் சேர்ந்தது தான் கிராமம். ஒரு கிராமத்தின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் வளர்ச்சி ஆகும். 12 கிராம ஊராட்சிகள் இணைந்து பொம்மம்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இக்கூட்டத்தில் சாலைவசதி, மின்விளக்கு, குடிநீர் வசதி, அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும், மேலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கிராம சபை கூட்டங்களில் விவாதிக்கப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கலைஞரின் கனவு இல்லம், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவுத் திட்டம், அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கூட்டுறவு துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனைத்து அரசு துறையினரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களை அறிந்து முழுமையாக பயன்படுத்தி சிறப்பாக வாழ வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் –II, ஜல் ஜீவன் இயக்கம், இதர பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாட்டு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சுதந்திர தின விழாவினை முன்னிட்டு அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் துணை மேயர் செ.பூபதி, திருச்செங்கோடு உதவி ஆட்சியர் அங்கித்குமார் ஜெயின், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சு.வடிவேல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், வேளாண்மை இணை இயக்குநர் பெ.கலைச்செல்வி, முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) (உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ)) மா.பரமேஸ்வரன் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story