அவசரகதியில் தேசியக்கொடி ஏற்றிய ஊராட்சி எழுத்தர் முன்னாள் நிர்வாகிகள், பொதுமக்கள் கடும் கண்டனம்

X
Komarapalayam King 24x7 |15 Aug 2025 8:29 PM ISTகுமாரபாளையம் அருகே அவசரகதியில் தேசியக்கொடியை ஊராட்சி எழுத்தர் ஏற்றியதால் முன்னாள் அ.தி.மு.க. உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்
குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் நம் நாட்டின் 79 ஆவது சுதந்திர தின கொடியேற்று விழா நிகழ்ச்சி நடந்தது.. இதற்காக ஊராட்சி எழுத்தர் வினோத் அனைத்துக் கட்சி நிர்வாகிகளையும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து நேற்று காலை 8:30 மணி முதல் 9 மணிக்குள் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுவதாக அழைப்பு விடுத்திருந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த திமுக ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து எட்டு முப்பது மணிக்கு வந்தார். அவர் வந்ததும் ஊராட்சி எழுத்தர் வினோத் தேசியக்கொடி ஏற்றினார். அருகில் ஆங்காங்கே நின்று கொண்டிருந்த அ.தி.மு.க. உள்ளிட்ட பல கட்சியினர், பொதுமக்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டது தாங்கிக் கொள்ள முடியாமல் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் உடனடியாக பல்லக்காபாளையம் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்கள் வருவதற்கு முன்பே ஊராட்சி அலுவலக தேசிய கொடியை ஏற்றிய ஊராட்சி எழுத்தர் வினோத் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். சுதந்திர தினத்தன்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
