ஏகாட்சர மகாகணபதி கோவிலில் விழா துவக்கம் 

ஏகாட்சர மகாகணபதி கோவிலில் விழா துவக்கம் 
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி  விவேகானந்த கேந்திர வளாகத்தில் ஏகாட்சர மகா கணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று தொடங்கி, வரும் 27-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான இன்று காலையில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பிறகு மேளதாளங்கள், பஞ்ச வாத்தியங்கள், மங்கள இசை முழங்க காலை 10 மணிக்கு கொடியேற்றப்பட்டது. திருவிழா நாட்களில் தினமும் காலையில் யாகசாலை பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. 6-ம் நாள் திருவிழாவான 23-ந்தேதி இரவு 7 மணிக்கு108 கும்ப கலச முதல் கால பூஜைகள் தொடங்குகின்றன. 7-ம் நாள் திருவிழாவான 24-ந்தேதி காலை 9 மணிக்கு 108 கலச அபிஷேகமும் அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. விநாயகர் சதுர்த்தி நாளன்று (27-ந்தேதி) காலை 9.30 மணிக்கு விநாயகருக்கு யாக கலச அபிஷேகமும், அஷ்ட கலச அபிஷேகமும் நடக்கிறது. 10.30 மணிக்கு 21 வகையான அபிஷேகங்கள் நடக்கின்றன. மறுநாள் (28-ந்தேதி) காலையில் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரையில் விநாயகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன்  தலைமையில்  கேந்திர நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
Next Story