நிதி மோசடி வழக்கு: ஒரு ரூபாயை மறைத்தாலும் கடும் நடவடிக்கை - தேவநாதன் யாதவுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

X
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ''தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்'' நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்த நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த வழக்கில் கடந்த ஓராண்டாக சிறையில் இருக்கும் தேவநாதன் யாதவ் மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சொத்துக்களை முடக்குவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என சொத்துக்களின் உரிமையாளர்களிடமும், நிதி நிறுவனங்களிடமும் ஒப்புதல் பெற்று அறிக்கை தாக்கல் செய்ய பொருளாதார குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேவநாதன் யாதவுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்கக்கூடும் என பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனியப்பராஜ் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக தேவநாதன் யாதவ் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என கண்டனம் தெரிவித்தார். மேலும், பொருளாதார குற்றப்பிரிவு வரலாற்றில் வழக்கை விரைந்து விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுக் கொடுத்த ஒரு வழக்கை கூறுங்கள்? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், தேவநாதன் தரப்பில் தனக்கு குறைந்தது 6 வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கினால் தன்னுடைய சொத்துக்களை விற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தனக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் ரொக்கங்கள் குறித்த விவரங்களை ஆகஸ்ட் 25 ஆம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய தேவநாதனுக்கு யாதவுக்கு உத்தரவிட்டார். இதில் ஒரு சென்ட் நிலம் அல்லது ஒரு ரூபாயை மறைத்தாலும் கூட தேவநாதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதி, தேவநாதன் யாதவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது பற்றி அன்றைய தினம் முடிவெடுக்கப்படும் என தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்தார்.
Next Story

